×

உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி?

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி முதியவர் உயிரிழந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (86), விவசாயி. கடந்த மே 1ம் தேதி இவர் வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மாலை வரையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இதே கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுருவுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் வேலாயுதம் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற எடைக்கல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடல் கருகிய நிலையில் கிடந்த தனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், விவசாய நிலங்களை சுற்றி வைக்கப்பட்டுள்ள மின் கம்பி வேலியில் சிக்கி தனது தந்தை உயிரிழந்திருக்கலாம் என்றும் எடைக்கல் காவல் நிலையத்தில் வேலாயுதம் மகன் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

* டேபிள் பேன் ஒயரை இழுத்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் வண்டாபாளையம் பூங்கா நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதிக்கு சுவேதா (9) என்ற மகளும், யோகேஸ்வரன் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். கடந்த 1ம்தேதி ராஜேஸ்வரி , தனது மகன் யோகேஸ்வரனுடன் காரைக்கால் அடுத்த நிரவி காக்கமொழி கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை யோகேஸ்வரன் வீட்டில் இருந்த போது தரையில் இருந்த டேபிள் பேனின் ஒயரை பிடித்து இழுத்து விளையாடி உள்ளான். அப்போது, அதிலிருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக யோகேஸ்வரன் மீது பாய்ந்து படுகாயமடைந்தார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் யோகேஸ்வரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

The post உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி? appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Ulundurpet ,Velayutham ,Uthakal ,Kallakurichi district ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்